இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜாவை இலங்கை தமிழ் எம்.பி.க்கள் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர்.
2010-07-08 00:09:23
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜாவை இலங்கை தமிழ் எம்.பி.க்கள் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி.க்கள் இந்தியா வந்துள்ளனர். இந்த குழுவில் சம்பந்தம் சுரேஷ் பிரேமசந்திரன் சேனாதி ராஜா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த தமிழ் எம்.பி.க்கள் அங்கு கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா எம்.பி.யை சந்தித்தனர். அப்போது இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண இந்தியா தீவிரமாக முயற்சிப்பதன் அவசியத்தை தமிழ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். அதற்கு டி.ராஜா இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த இந்தியா வற்புறுத்தாதது ஏன் என்பது புரியவில்லை. தமிழர் பகுதியில் ராணுவ முகாம்கள் அமைக்கப்படுவது கவலை அளிக்கிறது. இலங்கை தமிழர்களின் பிரச்னைகளுக்காக நாடாளுமன்றத்திலும் வெளியேயும் இந்திய கம்யூனிஸ்ட் குரல் கொடுக்கும். குறிப்பாக முகாம்களில் வசிப்பவர்களை குடியமர்த்தவும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்ய இந்திய அரசை வற்புறுத்துவோம் என்று கூறினார்.