தம்மை எதிர்ப்பவர்களையெல்லாம் கைது செய்யும் கருணாநிதி, மார்கோஸ், இடிஅமீன் உள்ளிட்ட கொடுங்கோல் சர்வாதிகாரிகளைப் போல் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் விரைவில் தள்ளப்படுவார் என்று ஜெயலலிதா குற்றஞ்சாற்றியுள்ளார்.
2010-07-22 08:20:56
இதுக் குறித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் அனைத்து விதமான கொடுமைகளுக்கும், அவமானங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க தந்தையர்களும், கணவர்களும், சகோதரர்களும் இல்லாத சூழ்நிலையில், இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில், வெட்ட வெளியில், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலைமைக்கும், குளிக்க வேண்டிய நிலைமைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பாக் ஜலசந்திக்கு அப்பால், மிக அருகில் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளின் இத்தகைய நெஞ்சை பிளக்கும் நிலைமை மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளின் அரசுகள் மற்றும் ஐ.நா. சபைக்கும் நியாயமான கிளர்ச்சியை, கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இன்னமும் இலங்கைத் தமிழர்களின் மீது தனக்கு அக்கறை உள்ளது போல் கருணாநிதி உலகுக்கு காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். ஆனால், இதே தமிழர்கள் நன்றாக இருப்பதாக கருணாநிதியால் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட குழு ஏற்கனவே தெரிவித்தது. இதன் மூலம் இதற்கு முன்பு தன்னால் அனுப்பப்பட்ட குழு போலியானது என்றும், அந்தக் குழுவின் மதிப்பீடு உண்மைக்குப் புறம்பானது என்றும் கருணாநிதி ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் மேலும், இப்படி, பல கதைகளை அவிழ்த்துவிட்டு, விமர்சிப்பவர்களையும், எதிர்ப்பவர்களையும் கைது செய்யும் கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சி மார்கோஸ், இடிஅமீன் உள்ளிட்ட கொடுங்கோல் சர்வாதிகாரிகளைப் போல் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் விரைவில் தள்ளப்படும் என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் குற்றஞ்சாற்றியுள்ளார்