வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2010-07-28 04:02:00
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் திருமலைராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநிலத் துணைத்தலைவர் கசாலி கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் மாரிச்செல்வம், மாவட்ட அமைப்புச் செயலாளர் பிரான்சிஸ், மாவட்டத் துணைச்செயலாளர் முருகப்பெருமாள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மக்கள் தொகை அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும், வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சேலம் காந்திரோடு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது இதற்கு மாநிலத் தலைவர் கோ.க.மணி தலைமைதாங்கி துவக்கிவைத்தார். சேலம் காந்திரோடு பகுதியில் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆட்சியர் பழைய அலுவலகம் முன்பு நிறைவுற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி, மாநில இளைஞரணிசெயலாளர் அருள், மாநகரசெயலாளர் கதிர்ராஜரத்தினம், நிர்வாகிகள் காமராஜ், சத்ரியசேகர் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.