முல்லைபெரியாறு அணையை உடைக்கும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டுவருவதாக ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
2010-07-28 04:03:12
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரில் ம.தி.மு.க.வின் கொடியேற்றுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியப் பெருந்தலைவர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வைகோ கலந்துகொண்டு கட்சிக்கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, ஒரு குடும்பத்தின் பிடியிலே தமிழகம் மூழ்கியிருப்பதாகவும், செம்மொழி மாநாட்டிற்காக மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் முல்லைபெரியாறு அணை உடைக்கப்பட்டால் தெற்குசீமை வறண்டு பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதென்றும் இந்த அணையை உடைக்க கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் வைகோ தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர் ஜோயல், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் வரதராஜன், இளைஞரணி செயலாளர் வினாயக ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.